நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்ட ரூ.30,000 கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா கூறினார். கடந்த இரு ஆண்டுகளில் இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கறுப்புப் பணம் குறித்த தேசிய கருத்தரங்கில் அவர் பேசுகையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்டிருந்த கறுப்புப் பணம் ரூ. 30,000 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுபோன்ற கறுப்புப் பணம் சேர்ப்பவர்கள் குறித்து புலனாய்வு செய்யவும், விசாரிக்கவும் சிபிடிடி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது. அந்த அனுமதி கிடைத்தால் இவ்வாறு கைப்பற்றப்படும் கறுப்புப் பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இந்த கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது. ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காமல், யாருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடுவது கிடையாது.
கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிய கணக்கு காட்டிய 1.15 கோடி பேருக்கு அவர்கள் செலுத்திய வரி திரும்ப (ரீபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1.04 லட்சம் கோடியாகும்.
இந்த ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டில் வருமான வரியாக ரூ. 74,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் மே 15ம் தேதி வரை 45 நாள்களில் ரூ. 28,000 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகையை விட இது மூன்று மடங்கு அதிகம்.
வருமான வரித்துறையில் கிரிமினல் புலனாய்வு இயக்குநரகத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துவிட்டார்.
மேலும் ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க வரித்துறை சாராத அமலாக்கப் பிரிவு ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கறுப்புப் பணம் விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறோம். வரி விதிக்கப்படாத 14 நாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுடன் பேசி வருகிறோம். இதில் பஹாமஸ், ஐசில் ஆஃப் மேன் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் நாம் கேட்கும் தகவல்களை அளிக்கின்றன. இந்தத் தகவல்களை அளிக்காத நாடுகள் ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் என அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்யவோ அல்லது இத்தகைய நாடுகளில் இந்தியர்கள் வர்த்தகம் செய்யவோ மிக அதிகமான வரிகளை விதிக்கலாம் என்றார்.
பஞ்ச் பாலா: கிடைச்சது இவ்வளவு, பதுக்கியது எவ்வளவோ?
No comments:
Post a Comment