நம் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகளில் வெளிநாட்டினர் வந்து தங்கிப் படிப்பதை நிறையப் பார்க்கிறோம். வெளி நாட்டினர் மருத்துவத் தேவைகளுக்காகவும்-பெரும்பாலும் குறைந்த செலவு என்பதால்-நம் நாட்டிற்கு வருகிறார்கள். ஆனால் நம் நாட்டில் உள்ளோர் மட்டும் வேலை தேடி ஏன் அயல் நாடுகளுக்கு சென்று விடுகிறார்கள்?? அவர்களுக்கு குடும்பம், குழந்தைகள் மனைவி,தாய்,தகப்பனை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும் என்று ஆசையா? பணம் சம்பாதிக்க வேண்டித்தானே எல்லாரும் கடல் கடந்து ஓடுகிறார்கள். உடனே இன்ஜநீரிங் படித்தவர்கள் மட்டும் என்று கற்பனை செய்யாதீர்கள்.. நமக்குத் தெரிந்த அளவிலேயே, கேரளாவிலிருந்தும், நம் தென் தமிழ் நாட்டிலிருந்தும் டிரைவர், கொத்தனார்,கார்ப்பென்ட்டர் என்று எல்லாத் துறைகளுக்கும் அரபு நாடுகளில் முயற்சிக்கவில்லையா என்ன? படித்தவர்கள் மட்டுமன்றி எல்லாரும்தான் வேலை தேடி வெளிநாடு செல்கிறார்கள். கவனிக்க வெளி நாட்டினர் இங்கு படிக்க வருகிறார்கள், சுற்றுலா வருகிறார்கள்.. வேலை தேடி ஏன் வருவதில்லை?? ![]() | |
| குல்சாரிலால் நந்தா |
அதாவது அறிவினால் ஆகட்டும் அல்லது உழைப்பினால் ஆகட்டும் நம் நாட்டை விட அயல் நாடுகளில் அதிகம் சம்பாதிக்க முடிகிறது என்பது உண்மை. அப்படியானால், கிட்டத்தட்ட 120 கோடி மூளை உள்ள இந்த நாட்டில், நல்ல கல்வி கிடைக்கும், உழைப்பு கிடைக்கும் ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடைக்காது.. இந்த நாட்டிலிருந்து நல்ல மூளைகளையும் நல்ல உழைப்பையும் நாடு கடத்துகிறோம். இன்னொரு கொள்ளை கும்பல் கொள்ளை அடித்த கறுப்புப் பணத்தை நாடு கடத்தி ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
நம் 63 ஆண்டு சுதந்திர இந்தியாவில் அதிக காலம் தலைமை ஏற்று ஆட்சி செய்திருப்பது காங்கிரஸ் கட்சி தான்.இது பெருமைக்குரிய விஷயமா?கூட்டணிகள் கதை இன்னும் காமெடி!! கிரிக்கெட்டில் உலகம் மெச்சும் சச்சின் இன்று தலைமையிலா இருக்கிறார்? ஆனாலும் நம் தேசத்துக்கே பெருமை சேர்க்கும் ஒரு ஆட்டக்காரர். இப்படி அல்லவா கூட்டணி என்பது இருக்க வேண்டும்.(மென்பொருள் துறை போல கிரிக்கெட்டிலும் வருமானம் வருவதால் இங்கே இருக்கிறார்கள்.. இல்லாவிடில் இத்துறையினரும் ஓடி விடுவார்கள்) ஆனால் பாவம் இப்போது கிரிக்கெட்டும் அரசியாலாகிக் கொண்டிருக்கிறது!!
நம்மூரில் எடுத்துக்கொண்டால் தள்ளாத வயதிலும் நான் ஆறாவது முறை தலைமை ஏற்பேன் என்று சூளுரைக்கிறார் கலைஞர். இந்த வயதிலும் அவரது உழைப்பு நிச்சயம் சாதாரணமான விஷயமல்ல என்றாலும், அந்த உழைப்பின் பயன் மக்களுக்குக் கிடைக்கிறதா? மன்னிக்க... பொது மக்களுக்குக் கிடைக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் எல்லா மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்ற முடிந்ததா? இப்போதிருக்கும் ஆளும் கட்சிகள் இலவசமாக அல்ல- கட்டணம் வசூலிக்கும், மின்சாரத்தையாவது நிறைவாக கொடுக்கின்றனவா??
கடைசி ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்கிறார்..... ஒரு வேளை தன்னைப் பரம ஏழை(!!) என்று சொல்லிக் கொள்வதாலோ என்னவோ? இலவசங்கள் கொடுப்பதன் காரணம், பெரும்பான்மை மக்கள் யாரும் தானே சம்பாதித்து முன்னேறி விடக்கூடாது என்பதால தானே! அந்த இலவசங்களைக் கொடுப்பது மக்களின் வரிப் பணத்தில்..அதிலும் இலவச டிவி கொடுத்ததால் தங்கள் பேரன்களுக்கு கேபிள் கனெக்சன் மூலம் பல்லாயிரம் கோடிகள் வருமானம் என்று எல்லாரும் சுட்டிக்காட்டி விட்டார்கள்..இப்போது தமிழக அரசின் கடன் ஒரு லக்ஷத்து பத்தொன்பதாயிரம் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள்.இதன் வட்டித் தொகையே இப்போது பதினாலாயிரம் கோடியாம்.. இது பொது மக்கள் தலையில். ஆங்கிலத்தில் சொல்வார்களே: யாருக்கும் இலவச மீன் கொடுக்காதீர்-மீன் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள என்று.... இதை யாராவது சொல்ல மாட்டார்களா?
அதாவது இந்த நாட்டில் உழைப்புக் கேற்ற சம்பாத்தியம் கொடுக்க பணம் இருக்கிறது., எல்லா செல்வங்களும் இருக்கின்றன... ஆனால் அவை யாருக்குப் போக வேண்டுமோ அவர்களுக்குப் போவதில்லை!! ஆனால், ஆளும் சிலரால் அவை எல்லாம் கறுப்பாகி வெளி நாடுகளில் பதுக்கப்படுகிறது. வெளி நாடுகளில் பதுக்கப் பட்டிருக்கும் தொகை கிட்டத்தட்ட ஒரு லக்ஷத்து எழுபத்தி ஐந்தாயிரம் கோடிகள் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள் கணக்கியல் வல்லுனர்கள். இது குறித்த விபரங்களை அயல் நாட்டு வங்கிகள் கொடுத்தாலும, பகிரங்கமாக வெளியிட முடியாது என்று தைரியமாக சொல்கிறது மத்திய அரசு!! கேவலம்!!
யாரேனும் என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு அயர்ன் கடை வைத்திருந்தவன்,ஒரு எலக்ட்ரீசியன்,டிவி ரிப்பேர் பண்ணுபவன், ஆட்டோக்காரன் யாராவது (அரசியல்வாதி ஆகாமல்- அதே தொழிலில்) நல்ல நிலை அடைந்தான் என்று சுட்டிக் காட்டுங்களேன் பார்ப்போம்..
உடனே யாரும் இப்போது மென்பொருள் துறை வல்லுனர்கள் நம் நாட்டில் சம்பாதிக்கவில்லையா என்று கேட்காதீர்.. ஒரு பக்கம் மட்டும் அடையும் வளர்ச்சி.. அதன் பெயர் வளர்ச்சி அல்ல... வீக்கம்,, அது வியாதி.
ஐந்து முறை முதல்வர் என்ற தலைமை ஏற்றவராலும், பெரும்பாலான காலம் சுதந்திர இந்தியாவை ஆண்ட காங்கிரசாலும் இந்த நாட்டுக்கு என்ன நன்மை செய்து விட முடியும்? அல்லது என்ன நன்மை செய்தார்கள்?(செய்யவும் மாட்டார்கள் - அதற்காகத்தான் மொழி வாரியாக, ஜாதி வாரியாக,புதுப் பெயர்கள் எல்லாம் சூட்டி மக்களை ஏமாற்றிக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்) தானும் தன் வகையறாக்களும் கொழுத்தார்கள்.. வெறும் பெருமை பீற்றிக்கொள்ளலாம்... அவ்வளவே!!
எப்போது நம் நாட்டின் மூளைகளை வெளிநாட்டுக்குச் சென்று விற்கும் நிலைமையை மாற்றப் போகிறோமோ அன்று மாற்றம் தொடங்கியதாகக் கொள்ளலாம்.அதற்கான காலம் தானே வருமோ அல்லது எகிப்து,லிபியா மாதிரி ஒரு புரட்சி/ சிவில் வார் வந்த பின் வருமோ!!
அதிக காலம் தலைமை ஏற்பது பெருமை அல்ல.. நன்மைகள் செய்வதில் சாதனை செய்து அதிக காலம் தலைமை திணிக்கப்படும் நிலை அடைதல்தான் பெருமை..
(நரேந்திர மோடியும், நிதிஷ் குமாரும் ஒரு வேளை அந்த நிலை அடையகூடும் !)





